செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் பஸ் டிரைவருக்கும் ஊழியர்களுக்கும் ஏற்பட்ட மோதல் சம்பவத்தால் சுங்கச்சாவடி முழுவதும் சூறையாடப்பட்டது. கலவரம் குறித்து விசாரணை நடத்திய போலீசார் 4 பேரை கைது செய்தனர்.சென்னை அருகே உள்ள செங்கல்பட்டை அடுத்த பரனூரில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி உள்ளது. இங்கு வட மாநிலத்தவர்கள் தங்கி பணியாற்றி வருகிறார்கள்.
நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு அரசு விரைவு பஸ் புறப்பட்டு சென்றது. பஸ்சை நெல்லை நாங்குநேரியை சேர்ந்த நாராயணன் (38) என்பவர் ஓட்டி சென்றார். அம்பாசமுத்திரத்தை சேர்ந்த பசும்பொன் முத்துராமலிங்கம் கண்டக்டராக இருந்தார்.பஸ் சுங்கச்சாவடி வந்தபோது அங்கிருந்த ஊழியர்கள் அரசு பஸ்சை மறித்து கட்டணம் கேட்டனர். பாஸ்டாக் ஏற்கனவே எடுத்து விட்டதாகவும் மீண்டும் எடுக்க முடியாது எனவும் டிரைவர் கூறியுள்ளார். இதை சுங்கச்சாவடி ஊழியர்கள் ஏற்க மறுத்தனர்.
இதனால் டிரைவருக்கும் ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சுங்கச்சாவடி ஊழியர்கள் குல்தீப்சிங் (27), விகாஸ்குப்தா (25) ஆகியோர் டிரைவரை தாக்கி உள்ளனர்.தட்டிக்கேட்ட கண்டக்டரையும் தாக்கினர். இதனால் ஆத்திரம் அடைந்த டிரைவர் பஸ்சை சுங்கச்சாவடி குறுக்கே நிறுத்தியுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த மற்ற பஸ் டிரைவர்களும் சாலையின் நடுவே நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நள்ளிரவு நேரத்தில் நடந்த இந்த மோதலால் சென்னை - திருச்சி சாலையில் இரு புறமும் வாகனங்கள் அணி வகுத்து நின்றன.இந்த சம்பவத்தை தொடர்ந்து பஸ்சில் வந்த பயணிகள் அரசு பஸ் டிரைவருக்கு ஆதரவாக சுங்கச்சாவடி ஊழியர்களை தாக்கினர். அனைத்து கட்டண கவுண்டர்களையும் அடித்து நொறுக்கினார்கள். இந்த வன்முறையின்போது சிலர் வசூலிக்கப்பட்ட சுங்க கட்டணத்தையும் திருடி சென்றதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த செங்கல்பட்டு போலீசார் விரைந்துசென்று போக்குவரத்து நெரிசலை சரிபடுத்தினர். இதனால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதிகாலை 4 மணிக்கு பிறகு தான் வாகனங்கள் சென்றன.கலவரம் குறித்து விசாரணை நடத்திய போலீசார், டிரைவர் நாராயணன், கண்டக்டர் பசும்பொன் முத்துராமலிங்கம் மற்றும் சுங்கச்சாவடி ஊழியர்கள் குல்தீப்சிங், விகாஸ்குப்தா ஆகிய 4 பேரையும் கைது செய்து நீதிமன்ற காவலில் அடைத்தனர்.
இந்த சம்பவத்தால் சுங்கச்சாவடி முழுவதும் சூறையாடப்பட்டுள்ளது. 8 கவுண்டர்களும் அடித்து நொறுக்கப்பட்டு இருந்தன. கம்ப்யூட்டர், இணையதளம் (கேபிள்), தடுப்பு கட்டை உள்ளிட்ட அனைத்தும் சேதம் அடைந்துள்ளன.சேதம் அடைந்த பொருட்களை மாற்றி சரிசெய்ய ஒருவார காலம் ஆகும் என்று தெரிகிறது. அதுவரையில் சுங்கச்சாவடியில் கட்டணம் இல்லாமல் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.