X Close
X
+91-9846067672

சந்திரயான்-2 விண்கலம் இன்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது...


இந்திய விண்வெளி ஆராய்ச்சி பணிகளில் அளப்பரிய பெரும்சாதனையாக ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 'சந்திரயான்-2’ விண்கலம்  இன்று வெற்றிகரமாக தனது பயணத்தை தொடங்கியது.இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோ கடந்த 2008-ம் ஆண்டு சந்திரயான் விண்கலத்தை சந்திரனில் ஆய்வு செய்ய அனுப்பியது.அந்த திட்டம் வெற்றி பெற்றதையடுத்து சந்திர கிரகத்தின் தென் துருவத்தில் இறங்கி ஆய்வு மேற்கொள்ள சந்திரயான்-2 விண்கலத்தை அனுப்ப இஸ்ரோ முடிவு செய்து அதற்கான பணியில் ஈடுபட்டது.

அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் கடந்த 15-ந்தேதி அதிகாலை சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்தது.ஆனால், அன்று அதிகாலை பி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட்டில் எரிபொருள் நிரப்பப்பட்டபோது, தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து சந்திரயான்-2 ஏவப்படுவது நிறுத்தப்பட்டது.தொழில் நுட்ப கோளாறை சரி செய்யும் பணியில் விஞ்ஞானிகள், என்ஜினீயர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். கோளாறு சரி செய்யப்பட்டதால் 22-ந்தேதி பிற்பகல் 2.43 மணிக்கு சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்தது.

சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ‘சந்திரயான்-2’ விண்வெளி பயணத்துக்கான 20 மணிநேர கவுன்ட்டவுன் நேற்று (ஞாயிறு) மாலை 6.43 மணிக்கு தொடங்கியது. இன்று காலை முதல் சந்திராயனை விண்ணில் செலுத்துவதற்கான ஆயத்தப் பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டனர்.சந்திராயனை சுமந்து செல்லும் பி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட்டில் திரவ ஆக்சிஜன் மற்றும் சி-25 எனப்படும் ‘கிரயோஜெனிக்’ படிநிலைக்கு திரவ ஹைட்ரோஜன் போன்றவை நிரப்பும் பணிகள் பிற்பகல் 1.40 மணியளவில் நிறைவடைந்தன.

பிற்பகல் 1.43 மணியளவில் அடுத்த ஒரு மணி நேரத்துக்கான (3600 வினாடிகள்) இறுதிக்கட்ட கவுன்ட்டவுன் தொடங்கியது.இதைதொடர்ந்து, திட்டமிட்டபடி சரியாக 2.43 மணிக்கு 'சந்திரயான்-2’ வெற்றிகரமாக தனது விண்வெளி பயணத்தை தொடங்கியது.இந்திய விண்வெளி ஆராய்ச்சி பணிகளில் ஒருகட்டமாக சந்திரனை ஆய்வு செய்யும் அளப்பரிய பெரும்சாதனையாக 'சந்திரயான்-2’ விண்கலம் இன்று வெற்றிகரமாக தனது பயணத்தை தொடங்கியது.

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் குவிந்திருந்த விஞ்ஞானிகள், என்ஜினீயர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து இந்த காட்சியை நேரில் பார்வையிட வந்திருந்தவர்கள் அனைவரும் இந்த வெற்றியை கரவொலி எழுப்பி, மகிழ்ச்சி ஆரவாரத்துடன் கொண்டாடி வருகின்றனர்.