X Close
X
+91-9846067672

குரூப்-4 தேர்வு முறைகேடு: 99 தேர்வர்களை டிஎன்பிஎஸ்சி தகுதிநீக்கம் செய்தது!


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற குரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இது தேர்வு எழுதியவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக தேர்வாணையம் தீவிர விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுத்துள்ளது.

குரூப்-4 முறைகேடு தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் இன்று பரபரப்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் போன்ற பதவிகளை உள்ளடக்கிய 9,398 பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ந் தேதி குரூப்-4 தேர்வு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட அலுவலர்களின் ஒத்துழைப்புடன் நடத்தப்பட்டது.16,29,865 விண்ணப்பதாரர்களுக்கு நடைபெற்ற தேர்வு முடிவுகள் கடந்த நவம்பர் 12-ந் தேதி அன்று வெளியிடப்பட்டது. 24,260 பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்று வருகிறது.

கடந்த 5-ந் தேதி சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை மையங்களில் பிற மாவட்டங்களிலிருந்து வந்து தேர்வு எழுதியவர்கள் தரவரிசைப்பட்டியலில் முதல் 100 இடங்களுக்குள் அதிகப்படியாக தேர்வாகியுள்ளதாக செய்தி வெளிவந்தது.தேர்வாணையம் நடத்திய ஆரம்பகட்ட விசாரணையில் 99 தேர்வர்கள் இடைத்தரகர்களின் ஆலோசனையின் பேரில் கீழக்கரை மற்றும் ராமேஸ்வரம் தேர்வு மையங்களைத் தேர்வு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தேர்வர்கள் இடைத்தரகர்களிடமிருந்து பெற்ற விடைகளைக் குறித்தவுடன் சில மணி நேரங்களில் மறையக்கூடிய சிறப்பு மையினாலான பேனாவினால் விடைகளைக் குறித்துவிட்டு வந்ததும் தெரிய வந்தது.சந்தேகத்திற்குரிய இடைத்தரகர்கள் தேர்வுப்பணியில் ஈடுபட்டிருந்த நபர்களின் துணையுடன் 52 தேர்வர்களின் விடைத்தாள்களில் திருத்தம் செய்து மாற்று விடைகளைக் குறித்து, அதே விடைத்தாள் கட்டுகளில் சேர்த்து வைத்துள்ளதும் தெரிய வந்துள்ளது. இதில் 39 தேர்வர்கள் முதல் 100 தரவரிசைக்குள் வந்துள்ளனர்.

இந்ததேர்வு குறித்து தேர்வாணையம் சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் தீவிரமாக ஆய்வு செய்தது. சம்பந்தப்பட்ட தேர்வுக்கூடங்களிலும், கருவூலங்களிலும் ஆய்வு நடைபெற்றது.தேர்வுப்பணியில் ஈடுபட்டிருந்த அலுவலர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தேர்வர்களிடம் நேரடி விசாரணை செய்ததன் அடிப்படையில் மேற்கண்ட தவறுகள், கீழக்கரை மற்றும் ராமேஸ்வரம் மையங்களில் நடைபெற்றது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த மையங்களைத் தவிர வேறு எந்த இடத்திலும் தவறு நடைபெறவில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.சம்பந்தப்பட்ட 99 தேர்வர்களை தகுதி நீக்கம் செய்து, வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுதத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.தரவரிசைப்பட்டியலில் வந்துள்ள 39 தேர்வர்களுக்கு பதில் தகுதியான வேறு 39 நபர்களைத் தெரிவு செய்து சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.99 தேர்வர்கள் மற்றும் இடைத்தரகர்களாக செயல்பட்ட சந்தேகத்திற்குரிய நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது.

பொய்யான வாக்குறுதிகளை சொல்லி, தவறான வழியில் வேலை வாங்கி தருவதாக கூறும் இடைத்தரகர்களிடம் விண்ணப்பதாரர்கள் மிகவும் கவனமாக இருக்குமாறு எச்சரிக்கப்படுகிறார்கள்.இதுபோன்ற தவறுகளில் ஒரு சில தேர்வர்களே ஈடுபட்டிருப்பது தேர்வாணையத்திற்கு வருத்தமளிப்பதாகவும் தேர்வாணையத்தின் மாண்பைக் குலைப்பதாகவும் உள்ளது.

தேர்வாணையத்தின் ஒவ்வொரு நடவடிக்கையும் வெளிப்படையாக ஒளிவுமறைவின்றி நடைபெறுகிறது. எனவே தேர்வர்கள் தேர்வாணையத்தின் மீது நம்பிக்கை வைத்து நேர்மையான முறையில் தேர்வினை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.