இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்கள். அதன் விவரம் வருமாறு:-
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவின் விவரம் பின்வருமாறு:-
கோடிக்கணக்கான மக்களை விண்வெளி நோக்கி பார்க்கவும், அறிவியல் மற்றும் விஞ்ஞானத்தின் ஆற்றல் மீது நம்பிக்கை வைக்கவும் ஊக்கமளித்த இஸ்ரோ குழுவினருக்கு நன்றி.முன்பைவிட நம்மை ஒருபடி முன்னே கொண்டு சென்றதற்காக நம்முடைய விஞ்ஞானிகள் குறித்து பெருமைகொள்கிறோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-
இஸ்ரோவுக்கு ஏற்பட்டது தோல்விக்கு சமமானது அல்ல. ஆராய்ச்சியில் விலை மதிப்பற்ற கற்றலுக்கான தருணம் இது. விரைவில் நாம் நிலவில் இருப்போம். நாடே இஸ்ரோ விஞ்ஞானிகளை நம்புகிறது. பாராட்டுகிறது.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:- சந்திரயான் விண்கலத்தின் ஆராய்ச்சிக் கருவியை தரையிறக்குவதில் ஏற்பட்ட பின்னடைவு தற்காலிகமானதே. பின்னடைவை சந்திக்காத விண்வெளி ஆராய்ச்சி உலகில் ஏதுமில்லை. சந்திரயான்-2 முயற்சி மிகவும் அற்புதமானது. இஸ்ரோ விஞ்ஞானிகள் பாராட்டப்பட வேண்டியவர்கள். அவர்கள் முயற்சி போற்றத்தக்கது.
2.1 கி.மீ. இடைவெளியில் நிலவு சாதனையை இழந்த இஸ்ரோ விஞ்ஞானிகள் விரைவில் நிலவை ஆளும் முயற்சியில் வெற்றியை சுவைப்பர். சாதாரண மனிதனுக்கும் நிலவு ஆராய்ச்சி குறித்த விழிப்புணர்வை சந்திரயான்-2 ஏற்படுத்தி உள்ளது. நிலவை நெருங்கும் முயற்சியில் விஞ்ஞானிகளுக்கு இந்த நாடு துணை நிற்கும்.