தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்படும் என்று தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் கடந்த ஜூன் 5-ம் தேதி அன்று அறிவிப்பு வெளியிட்டார். வரும் 2019 ஜனவரி 1-ம் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படும் என அறிவித்த நிலையில் அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.
தமிழக அரசு வெளியிட்ட இந்த அரசாணையில் சில விதிவிலக்குகள் வழங்கப்பட்டுள்ளது. பால் மற்றும் பால் பொருட்களை பேக் செய்ய பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள், தோட்டக்கலை மற்றும் வனத்துறை மூலம் மரங்கள் வளர்ப்பதற்கு அரசு உத்தரவின் அடிப்படையில் பிளாஸ்டிக் பயன்படுத்தலாம். சிறப்பு பொருளாதார மண்டலத்தில் தயாரித்து ஏற்றுமதி செய்யப்படும் பிளாஸ்டிக் பொருட்கள், உற்பத்தி நிறுவனத்தில் இருந்து பேக் செய்ய பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் மற்றும் மக்கும் பிளாஸ்டிக் இதற்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்ய கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது . இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பிளாஸ்டிக் பைகளை தடை செய்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு தடை இல்லை என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது. மேலும் வெள்ளிக்கிழமைக்கு வழக்கை தள்ளி வைத்தது சென்னை ஐகோர்ட்.